உள்ளூர் செய்திகள்
தமிழறிஞர்கள் 21 பேருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்

தமிழறிஞர்கள் 21 பேருக்கு தமிழக அரசு விருதுகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-03-15 12:20 IST   |   Update On 2022-03-15 14:08:00 IST
2021-ம் ஆண்டுக்கான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருது தொகையான 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை வழங்கப்பட்டது.
சென்னை:

தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

விழாவுக்கு வந்த அனைவரையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வரவேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமைச் சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்புக்கும் என மொத்தம் 21 பேருக்கு விருதுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

இதில் தந்தை பெரியார் விருதினை பெற்றவருக்கும், டாக்டர் அம்பேத்கர் விருதை பெற்றவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

மேலும் 2021-ம் ஆண்டுக்கான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருது தொகையான 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடையும், 2021-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கும் வழங்கி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, கேடயம், பொன்னாடை ஆகியவையும் வழங்கப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அய்யன் திருவள்ளுவர் விருது-2022 - மறைந்த மு.மீனாட்சி சுந்தரத்துக்கான விருதை அவரது மனைவி வசந்தா பெற்றார்.

பேரறிஞர் அண்ணா விருது-நாஞ்சில் சம்பத், பாவேந்தர் பாரதிதாசன் விருது-புலவர் செந்தலை ந.கவுதமன், சொல்லின் செல்வர் விருது-சூர்யா சேவியர், இளங்கோவடிகள் விருது- நெல்லை கண்ணன், மறைமலையடிகளார் விருது- சுகி.சிவம்.

முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது- முனைவர் வ.தனலட்சுமி, தந்தை பெரியார் விருது-க. திருநாவுக்கரசு, பெருந்தலைவர் காமராஜர் விருது- முனைவர் குமரிஅனந்தன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், ஜி.யு. போப் விருது- அ.சு.பன்னீர்செல்வம், தேவநேயப்பாவாணர் விருது- முனைவர் கு.அரசேந்திரன், அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது- முனைவர் இரா.சஞ்சீவிராயர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது-உயிர்மை (திங்களிதழ்) ஆசிரியர் எஸ்.அப்துல்ஹமீது (மனுஷ்யபுத்திரன்), அண்ணல் அம்பேத்கர் விருது- நீதிபதி சந்துரு, மகாகவி பாரதியார் விருது- பாரதி கிருஷ்ணகுமார், கம்பர் விருது- பாரதி பாஸ்கர்.

உமறுபுலவர் விருது- நா.மம்மது, சிங்காரவேலர் விருது- கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், அயோத்தி தாசப் பண்டிதர் விருது- ஞான. அலாய்சியஸ், தமிழ்த்தாய் விருது- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.


Similar News