உள்ளூர் செய்திகள்
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் அவலம்
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் அவல நிலை ஏற்படுள்ளது-.
புதுச்சேரி:
பாகூரில் அரசு ஆரம்ப நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், சேலியமேடு, பரிக்கல்பட்டு என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆனால் பாகூரில் உள்ள ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாகி விடுவதால் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
கரிக்கலாம் பாக்கம், தவளகுப்பம் மருத்துவ மனையில் இருந்து 108 ஆம்புலன்சை அழைத்து பாகூர் அல்லது கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ளவர்களை புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 14-ந் தேதி காலையில் கடலூர்-புதுவை சாலை காட்டுக்குப்பம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற பாகூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியை புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி 3 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர்.
அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பாகூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் அரியாங்குப்பத்தில் இருந்து வர வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீண்ட நேரம் படுகாயம்பட்டவர்கள் கிடந்ததால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கொதிப் படைந்தனர். விரைவில் பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.