நடுவழியில் அரசு பஸ் பழுது டிரைவர்-கண்டக்டரை சிறைபிடித்து பயணிகள் மறியல்
பண்ருட்டி:
சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு பண்ருட்டி வந்தது. பண்ருட்டியில் பிரேக் டவுன் ஆனதால் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அந்தபஸ்சை பழுதுபார்க்கும் பணிவிரைவாக தொடங்காததால் பஸ்சில் வந்த பயணிகள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பணிமனையில் இருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பில் கொண்டு வந்து இறக்கி விட்டனர். பாதி வழியில் பயணிகளை இறக்கி விடப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் பண்ருட்டி4 முனை சந்திப்பில் சாலையின் குறுக்கே திரண்டு நின்றுஅந்த பஸ் டிரைவர், கண்டக்டரை சிறைபிடித்து மறியல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது. போக்குவரத்தும் பாதித்தது.
தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிவழியில் தவித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வழியாக வந்த வேறொரு பஸ்சில் அவர்களை அனுப்பி வைத்தனர்.