உள்ளூர் செய்திகள்
கோவையில் 2,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே திவான்சாபுதூர் பகுதியில் நேற்று காலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாக்கு மூட்டைகளில் 1050கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரித்த போது அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் கடத்தலில் ஈடுபட முயன்ற ஆனைமலையை சேர்ந்த வெங்கடாச்சலத்தை தேடிவருகின்றனர்.
இதேபோல் கிழவுன்புதூர் பகுதியில் கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 350 கிலோ ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ரேசன் அசிரியை பதுக்கி வைத்திருந்த கேரளாவை சேர்ந்த முஜிபுர்ரகுமான் என்பவரையும் தேடிவருகின்றனர்.
ஆனைமலை பகுதியில் கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1050 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்த வைத்திருந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு தொடர்புடைய தினேஷ் என்பவரையும் தேடிவருகின்றனர். மொத்தம் 2450 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரிசி கடத்த முயன்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.