உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 4 லட்சம் நகை கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
விராலிமலை அருண்கார்டன் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமன் மனைவி லலிதா(வயது33). ராமன் வெளிநாட்டில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று லலிதா வீட்டை பூட்டி விட்டு ஜாதகம் பார்ப்பதற்காக ஊத்துக்குளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லலிதா, உடனே வீட்டினுள் சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது, அறையில் இருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
உடனே லலிதா விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.