ஊத்தங்கரை அருகே லாரி- பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதல்: உடல் கருகி வாலிபர் பலி
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர் பட்டி ஜெ.ஜெ.நகர் அருகே இன்று அதிகாலை சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
திருப்பத்தூரில் இருந்து சிங்காரப்பேட்டை நோக்கி பிக்கப் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது மகனூர்பட்டி என்ற இடத்தில் வந்த போது 2 வாகனங்களும் திடீரென எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பிக்கப் வேன் வாகனம் தீ பற்றி எரிந்தது. இதில் வாகனத்தை ஓட்டிவந்த திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள வெலக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அமீர் பாஷா என்பவர் மகன் பாசில் (வயது 26) என்ற வாலிபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர். பிறகு சம்பவத்தை அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம் அஸ்தகிரி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் செந்தில்குமார் (வயது 33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.