கடலூர் மத்திய சிறைச்சாலையில் செல்போன்- பேட்டரிகள் பறிமுதல்
கடலூர்:
கடலூர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பல்வேறு குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலை வளாகத்தில் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிறை அலுவலக துணை சிறை அலுவலர் சம்பத் மற்றும் போலீசார் சிறை வளாகத்தில் உள்ள வெளி சிறை பகுதியில் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு செல்போன் மற்றும் 3 பேட்டரிகள் இருந்தது.
இதனைத்தொடர்ந்து பொருட்களை பறிமுதல் செய்து பயன்படுத்திய நபர்கள் யார்? இதற்கு யார் யார் உடந்தை? என்கிற பல்வேறு கோணத்தில் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் துணை சிறைத் துறை அலுவலர் சம்பத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.