உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிகமாக நேரம் செலவிட வலியுறுத்தல்

Published On 2022-03-10 15:09 IST   |   Update On 2022-03-10 15:09:00 IST
குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிகமாக நேரத்தை செலவிட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பொன்புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

முகாமினை முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:
பெற்றோர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அந்த குழந்தைகள் தங்களுக்கு பிறந்ததை சுமையாக கருத கூடாது. சுகமாக கருத வேண்டும். அவர்களிடம் அதிகம் தனித்திறமைகள் உள்ளது. அதனை வெளிக்கொணர பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இம் மருத்துவ முகாமில் காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, கண் மருத்துவர், கண்பரிசோதகர், குழந்தைகள் நல மருத்துவர் என அனைத்து வகை சிறப்பு மருத்துவர்களும் கலந்து  கொண்டு குழந்தைகளை மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள், அறுவைச் சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம்கோ நிறுவனம் மூலம் அளவீட்டு முகாம் நடைபெற்று பின்னர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே பெற்றோர்கள் இந்த  அரிய வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி  தங்கள் குழந்தைகளுக்கு தேவையான  உபகரணங்களை பெற்று பயன் பெற வேண்டும் என்றார்.

முகாமில்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுதந்திரன், பொன்புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

 முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாததுரை, சரவணன், பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு ஆகியோர் தலைமையில் வட்டார வளமைய பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர்.

Similar News