உள்ளூர் செய்திகள்
கொள்ளை

மதுரை எஸ்.எஸ்.காலனியில் காய்கறி வியாபாரி வீட்டில் 32 பவுன் நகைகள்-ரூ.1½ லட்சம் கொள்ளை

Published On 2022-03-10 07:54 GMT   |   Update On 2022-03-10 07:54 GMT
மதுரை எஸ்.எஸ்.காலனியில் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற நேரத்தில் காய்கறி வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 58). இவர் பரவை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். இதனால் இவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். கோவிலில் இருந்து திரும்பிய கோபால் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக எஸ்.எஸ். காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

வீட்டின் கதவு பூட்டை உடைக்காமல் கொள்ளையர்கள் எப்படி வீட்டுக்குள் நுழைந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோபால் ஊருக்கு செல்லும்போது சாவியை மறைவிடத்தில் வைத்துச் சென்றதாக தெரிவித்தார்.

எனவே இதனை அறிந்த யாரோ தான் சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதினர். பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கோபால் தெரிவித்தார்.

இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News