உள்ளூர் செய்திகள்
பனிப்பொழிவு

கடலூர் மாவட்டத்தில் கடும் மூடுபனி- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-03-09 10:34 GMT   |   Update On 2022-03-09 10:34 GMT
கடலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.
கடலூர்:

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படுகிறது. இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மாற்றம் உருவாகிறது.

கடலூர் மாவட்டத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்ட நிலையில் ஓரிரு நாட்களில் இரவு முழுவதும் மழை பெய்து வந்தது. இருந்தபோதிலும் இதுதவிர ஓரிரு நாட்களில் காலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

இந்த பருவநிலை மாற்றத்தால் காலையில் கடும் பனிப்பொழிவு மதிய நேரத்தில் கடும் வெயில் மற்றும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்து வருகிறது. இது மாறி மாறி தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்று அதிகாலை முதலே கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, வான்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், வெள்ளக்கரை, பில்லாலி தொட்டி, திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், கோண்டூர், பெரியகங்கனாங்குப்பம், நகர் பகுதியான கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், வண்டி பாளையம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இந்த பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளின் எதிரே வரும் வாகனங்கள் எது என்று தெரியாமல் குழம்பினர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.

இந்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். வருகிற 15-ந் தேதி பங்குனி மாதம் தொடங்குகிறது. அன்று முதல் சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும்.

Tags:    

Similar News