உள்ளூர் செய்திகள்
கைது

உளுந்தூர்பேட்டை அருகே புதுவையிலிருந்து சாராயம் கடத்திய சிறுவன் கைது

Published On 2022-03-09 15:58 IST   |   Update On 2022-03-09 15:58:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதுவையிலிருந்து சாராயம் கடத்தியது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:

புதுச்சேரியிலிருந்து கார் ஒன்று உளுந்தூர்பேட்டை வழியாக தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த சிறுவன் ஓட்டி வந்தான்.

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் பகுதியில் கார் சென்றபோது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழ்ந்து கிடந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த சாராயக் கேனில் இருந்து சாராயம் வழிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் காரை சோதனை செய்ததில் காரில் இருந்து 10 சாராய கேன்களை பறிமுதல் செய்தனர். உடனே திருநாவலூர் போலீசார் உளுந்தூர்பேட்டை மது விலக்கு போலீசாரிடம் தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

காரை ஓட்டி வந்த சிறுவனிடம் விசாரணை செய்தபோது அவன் தஞ்சாவூரைச் சேர்ந்தவன் என்பதும் திருமண நிகழ்ச்சிக்காக புதுவையிலிருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த சிறுவனை கைது செய்தனர்.

Similar News