உள்ளூர் செய்திகள்
கொலை

ஆற்காடு அருகே காதல் திருமண தகராறில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்

Published On 2022-03-08 16:07 IST   |   Update On 2022-03-08 16:07:00 IST
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட தகராறில் மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி கடப்பந்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன் (வயது 42). விவசாயி இவருக்கு 2 மகன் 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் சினேகா இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கீராம் பாடியை சேர்ந்த மணி என்பவரது மகன் விக்னேஸ்வரன் (25) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் சசிதரன் விக்னேஸ்வரனின் தந்தை மணியின் கையை முறித்துவிட்டார். இதனால் முன்விரோதம் அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை சசிதரன் கீராம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த மணியை பார்த்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதை அறிந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது அண்ணன் பசுபதி (27) மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து சசிதரனை கத்தியால் வெட்டி சாய்த்தனர்.

இதில் பலத்த காயமடைந்த சசிதரன் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், பசுபதி, மணி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து விக்னேஸ்வரன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சசிதரன் மகளை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்தேன். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சசிதரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டார். மேலும் எனது தந்தையை தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் எனது தந்தை மணியை அவர் கத்தியை காட்டி மிரட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் எனது தந்தை அண்ணன் ஆகியோர் சேர்ந்து அவரை கத்தியால் வெட்டினோம். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.

Similar News