கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் அறிவுரை
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும்கண்காணிப்புக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்டவன்கொடுமை வழக்குகள் குறித்தும், அவ்வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நவடடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், இனிவரும் காலங்களில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், கள்ளக்குறிச்சி செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் விஜயராகவன், கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், இணை இயக்குநர் வேளாண்மை (திட்டம்) சுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.