உள்ளூர் செய்திகள்
விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்பட்ட காட்சி.

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2022-03-06 15:04 IST   |   Update On 2022-03-06 15:04:00 IST
புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நாளை மாலை மாசி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக  நடைபெறும்.
விழாவையொட்டி பூச்சொரிதல் விழாவுடன் கூடிய  தேரோட்டம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி தேரோட்டத்தை முன்னிட்டு  கடந்த 20.02.2022 அன்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம்  இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத்  தொட்டில் கட்டி கோவிலுக்கு மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதுக் கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியாக நாளை 07.03.2022 மாலை மாசி தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள்.  மாசிப்பெருந்திருவிழா 14.03.2022 ஆம் தேதி காப்புக் களைதலுடன் நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Similar News