உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஆண்டிமடத்தை அடுத்த முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை (வயது 43) இவர் கடந்த 2020&ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சை பிள்ளையை கைது செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 5 ஆண்டுகள், பாலியல் துன்புறுத்தல் அளித்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.