சங்கராபுரம், சின்னசேலம், பண்ருட்டியில் துணைத்தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சங்கராபுரம்:
தமிழகம் முழுவதும் மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகள் தலைவர், துணைத்தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் பதவிகளைப் பிடித்தனர்.
இருப்பினும் சில இடங்களில் தி.மு.க. தலைமையால் அதிகாரப்பூர்வமாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க.வினரே போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் போட்டியாக மனுதாக்கல் செய்து வென்றவர்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த சூழலில் பல்வேறு இடங்களில் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சியில் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சிசார்பில் லாவண்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் கடைசி நிமிடத்தில் போட்டியிட மறுத்து விட்டார். இதனால் துணைத் தலைவர் பதவிக்கும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலுக்கான வாக்களிப்பை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் புறக்கனித்தனர். இதனால் துணைதலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க.வேட்பாளர் சிவாவை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இந்த நகராட்சியிலும் துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
மேலும் அ.தி.மு.க., வி.சி.க., த.வா.க. வினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனால் இங்கும் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சங்கராபுரம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரோஜாரமணி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க.வும், வி.சி.க.வும் முட்டி மோதி வந்த நிலையில் காங்கிரசுக்கு அந்த பதவி ஒதுக்கப்பட்டது.
இதனால் பிற்பகல் நடந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் புறக்கனித்தனர். எனவே இங்கும் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்மலா ரவிச்சந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக சின்னசாமி என்ற தி.மு.க. வேட்பாளரை அறிவித்திருந்தனர். ஆனால் நகராடசி தேர்தலில் வி.சி.க. வினர் இந்த பதவியை தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு வலியுறுத்தி பெற்றதால் அக்கட்சியின் ராஜலட்சுமி துணைத் தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றார்.