உள்ளூர் செய்திகள்
வி‌ஷம்

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து கீதா மனு தாக்கல்- கணவர் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு

Published On 2022-03-04 14:00 IST   |   Update On 2022-03-04 14:00:00 IST
கடலூர் மாநகராட்சியின் 2-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரனும் மேயர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் தி.மு.க.-27 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி-3 வார்டுகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 3 வார்டுகளிலும், காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக 20-வது வார்டில் வெற்றிபெற்ற சுந்தரியை தி.மு.க. தலைமை அறிவித்தது. இன்று காலை சுந்தரி தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். திடீர் திருப்பமாக கடலூர் மாநகராட்சியின் 2-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் கீதா குணசேகரனும் மேயர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவரது கணவரும் தி.மு.க. நிர்வாகியுமான குணசேகரன் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மாயமாகி உள்ளதாக கூறப்படும் சூழலில் தற்போதுவரை 7 கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு போலீசார் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

தொடர்ந்து கடலூர் மாநகராட்சியில் நடைபெறும் மறைமுக தேர்தல்களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

Similar News