உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்- கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னணி நிறுவனத்தின் செல்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை கல்வி பயிலும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிகள், வேலையில்லாத பட்டதாரிகள், சுயதொழில் புரிபவர் தனியார் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய ரூ.12,000 மதிப்புள்ள திறன்பேசிகள் ஆண்ட்ராய்டு செல்போன் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும், பணிக்குச்செல்லும், மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல்தொடர்பு கல்வி வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்காக செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னணி நிறுவனத்தின் செல்போன் இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்த நிலையில் பட்டயபடிப்பு Diplomapolytechinic படிப்பு ITI பயிற்சி பெற்றுவரும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். விண்ணப்பதாரர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி, பணி, சுயதொழில் ஆகியவை தொடர்பான சான்றுகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய படிவத்தில் வரும் 07.03.2022க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வருமான உச்சவரம்பு ஏதுமின்றி இத்திட்டத்திற்கு உரிய விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து தர தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்டோர் அல்லது பார்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆண்ட்ராய்டு செல்போன் பெற்றிட விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.