உள்ளூர் செய்திகள்
உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை உடனே மீட்க வேண்டும்- வாலாஜாபாத் மாணவியின் பெற்றோர் கோரிக்கை
உக்ரைன் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று வாலாஜாபாத் மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவி உக்ரைன் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உக்ரைன் நாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமி பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.
ரஷியா நாட்டின் தொடர் தாக்குதல்களால் அப்பகுதியில் அவசர நிலை நிலவி வருகிறது. அங்கு வாழும் தமிழக மாணவர்கள் கீழ் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் கையிருப்பில் தற்போது குறைந்த அளவு உணவுகள் மட்டுமே உள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.
உணவு இடைவேளை நேரத்தில் மட்டுமே அவர்கள் மேல் தளத்தில் சென்று உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் கீழ் தளத்துக்கு செல்கிறார்கள். அப்பகுதியில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது. அப்பகுதியில் வாழும் தமிழக மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் இதை கருத்தில் கொண்டு எங்களை மீட்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.