உள்ளூர் செய்திகள்
ரெயில்

அறந்தாங்கி வழியாக சென்னைக்கு நேரடியாக விரைவில் ரெயில் சேவை

Published On 2022-02-26 13:44 IST   |   Update On 2022-02-26 13:44:00 IST
தனி ரெயில் மூலம் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு வந்த, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஸ்அகர்வால் இருப்புபாதைகள் குறித்தும், ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்க்கொண்டார்.
அறந்தாங்கி:

கடந்த 1902-ம் ஆண்டு முதல் காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் சென்னை வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியிலுள்ள வணிகர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரெயில் பாதை அமைப்பதற்க்கான பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அகல ரெயில் பாதை பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு முடிக்கப்பட்டு ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்ட ரெயில் சேவையானது கொரோனா காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் திருவாரூர், காரைக்குடி அதிவிரைவு ரெயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனி ரெயில் மூலம் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு வந்த, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணிஸ்அகர்வால் இருப்புபாதைகள் குறித்தும், ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்க்கொண்டார்.

அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில் பழைய முறைப்படி அறந்தாங்கி வழியாக சென்னைக்கு நேரடியாக ரெயில் வசதிகள் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோட்ட மேலாளர், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும், அதுவரை சென்னைக்கு செல்லும் ரெயிலை தொடரும் வகையில், அறந்தாங்கி மார்க்கமாக வரும் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்படும் என மனு அளித்தவர்களிடம் தெரிவித்தார்.

Similar News