உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-02-26 07:47 GMT   |   Update On 2022-02-26 07:47 GMT
பட்டுக்கோட்டையில் குடும்பத் தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமூலை பகுதியில் வசித்து வருபவர் குமார். 

இவருடைய மகள் நித்யா வயது (22). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அய்யப்பன் கம்பி பிட்டர் வேலை செய்து வருகிறார்.

திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நித்யா, ஆலடிக்கும் மூலை கிராமத்தில் உள்ள அவருடைய தந்தை வீட்டில் வசித்து வந்தார். 

அவருடைய கணவர் அய்யப்பன் அவரை இணைந்து வாழ வலியுறுத்திய போது நித்யாவுக்கும் அய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நித்யா பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மகளிர் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில் காவல் நிலையத்தை விட்டு வெளியில் வந்த நித்யா பழைய பேருந்து நிலைய பகுதியில் நடந்து செல்லும் பொழுது எலி விஷத்தை குடித்தார். இதனை பார்த்த அவருடைய கணவர் அய்யப்பன் அந்த விஷத்தை பறித்து தானும் குடித்தார்.

இதனை தொடர்ந்து மயக்கம் அடைந்த இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற நித்யா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நித்யா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் நலம் பெற்று வீடு திரும்பினார். நித்யாவின் தாயார் நாகம்மாள் பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணமாகி நான்கு மாதங்களிலேயே மரணம் அடைந்ததை தொடர்ந்து பட்டுக்கோட்டை ஆர்டிஓ பிரபாகரன் தலைமையில் தனி விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News