உள்ளூர் செய்திகள்
கைது

மோட்டார் சைக்கிளில் ரே‌ஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Published On 2022-02-25 11:46 IST   |   Update On 2022-02-25 11:46:00 IST
பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் ரே‌ஷன் அரிசியை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அரிசியை நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:

பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் பள்ளிப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் கண்காணித்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ரேசன் அரிசி கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து பள்ளிப்பட்டு பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த மோகன், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர்.புரம் பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 350 கிலோ ரே‌ஷன் அரிசி மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ரே‌ஷன் அரிசியை திருவள்ளூரில் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

Similar News