உள்ளூர் செய்திகள்
மண்டிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
அறந்தாங்கி அருகே மண்டிக்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அருள்பாலித்து வரும் மண்டிக்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆலங்குடி, ஊர்வணி, பாக்குடி, பஞ்சாத்தி மற்றும் அறந்தாங்கி நகர மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 16-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அன்று மாலை முதற்கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று நான்காம் கால யாகபூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது கோவிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது.
அதனைத்தொடர்ந்து சிவ ஸ்ரீ முத்துச்சாமி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குடி ஊர்வணி, பாக்குடி, பஞ்சாத்தி மற்றும் அறந்தாங்கி நகர பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.