உள்ளூர் செய்திகள்
செல்போன் டவரில் இருந்து மீட்கப்பட்ட செல்வகுமார்.

மது போதையில் நிர்வாணமாக 100 அடி செல்போன் டவரில் ஏறிய கொத்தனார்

Published On 2022-02-16 07:59 GMT   |   Update On 2022-02-16 07:59 GMT
பாபநாசம் அருகே மது போதையில் நிர்வாணமாக 100 அடி செல்போன் டவரில் ஏறிய கொத்தனாரை 5 மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே உத்தாணி திரௌபதி அம்மன் கோவில் அருகில் 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் உள்ளது. இந்த டவரில் வலங்கைமான் தில்லையம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் செல்வகுமார் (வயது 40). குடிப்பழக்கம் உள்ளவர்.

இவர் குடித்துவிட்டு அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கட்டி இருந்த துணிமணிகளை கீழே போட்டுவிட்டு நிர்வாண கோலத்தில் செல்போன் டவரில் 100 அடி உயரத்திற்கு சென்று விட்டார். இவரை மீட்பதற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன், சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சிங்காரவேலன், தினேஷ், ராம் குமார், தங்கதுரை ஆகியோர் கயிறு கட்டி ஏணிப்படி மூலமாக ஏறி அவரை காப்பாற்ற தீவிர முயற்சி செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் சந்தான கோபால கிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் ஆராமுதன், இன்ஸ்பெக்டர் விஜயா, சப்&இன்ஸ்பெக்டர் சங்கர், துணை வட்டாட்சியர் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் பழனிச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் லாவண்யா, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் இணைந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் டவரில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட செல்வகுமாரின் குடும்பத்தினரை வரவழைக்க ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு அவரது மனைவி, மகன் பிரவீன் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் ஒலிபெருக்கி மூலம் மனைவி, மகனை பேச வைத்தனர்.

 அதன்பிறகு செல்வகுமார் மனம் மாறி 100அடி டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் செல்வகுமாரை பத்திரமாக மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News