உள்ளூர் செய்திகள்
காரில் 150 கிலோ குட்கா கடத்திய 3 பேர் கைது
கும்பகோணத்தில் காரில் 150 கிலோ குட்கா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டீஸ்வரம்:
தஞ்சை மாவட்ட பகுதிகளில் குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியாஉத்தரவின்படி கும்பகோணம் உட்கோட்ட எஸ்.பி அசோகன் மேற்பார் வையில், தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் ராஜா, காவலர்கள் பால சுப்ரமணியன், நாடிமுத்து, ஜனார்த்தன், சேவியர், பிரகாஷ் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் கும்பகோணம் தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறவழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த கார் நிற்காமல் சென்றதை கண்ட தனிப்படை போலீசார் அந்த காரை பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி பிடித்தனர்.
சோதனையில் அதில் சுமார் 150 கிலோ பான் மசாலா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த கும்பேஸ்வரர் கோவில் அருகில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உத்தாராம் (36) மற்றும் அவரது நண்பர்களான திருநாகேஸ்வரம் மேலத்தெரு வினோத் (32), கும்பகோணம் சீனுவாசநகர் தமிழரசன் (60) ஆகிய மூவரையும் கைது செய்து காரையும், 150 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கும்பகோணம் மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி 3 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.