பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நேரடியாக புகார் செய்யலாம்- ஆவடி போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
ஆவடி:
சென்னை புறநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் புதிதாக ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.
ஆவடி போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். அவர் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆந்திராவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிட்டிபாபு என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிராக எழும் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறித்த புகார்களை நேரடியாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையுடன் 73057 35666, 73051 35666 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
புகார் குறித்து ரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.