உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2022-02-15 15:08 IST   |   Update On 2022-02-15 15:08:00 IST
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வருகிற 20-ந்தேதி பூச்சொரிதல் விழாவும், அடுத்த மாதம் 7-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக  நடைபெறும்.

விழாவையொட்டி பூச்சொரிதல் விழாவுடன் கூடிய  தேரோட்டம் காப்பு கட்டுதலுடன்    தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி தேரோட்டத்தை முன்னிட்டு  பூச்சொரிதல் விழா 20.02.2022 அன்று நடக்கிறது. 

இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத்  தொட்டில் கட்டி கோவிலுக்கு மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர், மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வருகிற 20-ந்தேதி இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதியில் பூக்களை சார்த்தி   வழிபட்டுச் செல்வார்கள். தொடர்ந்து 21.02.2022 (திங்கட்கிழமை) அதிகாலையில் பூப்பிரித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து வருகிற  07.03.2022 அன்று  மாசி தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். 

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 ஆம் நாள் (06.03.2022) அன்று பொங்கல் விழா நடக்கிறது.

மாசிப்பெருந்திருவிழா  14.03.2022 தேதி காப்புக்களைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Similar News