உள்ளூர் செய்திகள்
அரசு இசைக் கல்லூரியில் தியாகராஜர் ஆராதனை விழா
திருவையாறில் அரசு இசைக் கல்லூரியில் தியாகராஜர் சுவாமியின் ஆராதனை விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்:
திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை ஆண்டு தோறும் தஞ்சாவூர் பங்கஜம் ராஜு நாயுடு அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் தாஸ் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விழாவினை தாஸ் தொடக்கி வைத்தார்.
விழாவிற்கு அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஜெயசந்திரன், தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பரமசிவம், பொருளாளர் விஜய கிருஷ்ணன், செயலர் முனைவர் வெங்கடேசன், நிர்வாக உறுப்பினர், இசைக்கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் வருகைப் புரிந்தனர். இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் உமாமகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் அறக்கட்டளை நிறுவனர் தாஸ் சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய 4 அரசு இசைக் கல்லூரிகளிலும் சென்ற கல்வி ஆண்டில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து சென்னை மற்றும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளின் முதல்வர்கள் முனைவர் சாய்ராம் மற்றும் டேவிட் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி சார்பாக இசையாசிரியர் பயிற்சித் துறை மாணவி செல்வி வர்ஷிணி ஐஸ்வர்யா வீணை இசைக்கருவி வழங்கியமை குறித்து பேசினார். முடிவில் வீணைத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.