உள்ளூர் செய்திகள்
தாக்குதல்

இளம்பெண்-சிறுவனை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

Published On 2022-02-14 15:31 IST   |   Update On 2022-02-14 15:31:00 IST
திருமங்கலம் அருகே அரசு பஸ்சில் இளம்பெண்-சிறுவனை மாணவர்கள் சரமாரியாக தாக்கினர்.
மதுரை

மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. 

பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்கள் இரு பிரிவினராக பிரிந்து மோதிக்கொள்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பஸ்சில் ரவுடிகள்போல் தங்களை நினைத்துக் கொண்டு ஏறிய 10 பேர் கொண்ட மாணவர்கள் உருட்டுக்கட்டையால் இளம்பெண்- சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருமங்கலம் அருகே உள்ள மாவிலிபட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சின்னசக்கிலிபட்டிக்கு இளம்பெண் ஒருவருடன் அரசு பஸ்சில் புறப்பட்டார். 

அப்போது பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சிறுவனையும், இளம்பெண்ணையும் சரமாரியாக தாக்கியது. இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. 

இது குறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

படிக்கும் வயதில் மாணவர்கள் இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட சம்பவம் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News