உள்ளூர் செய்திகள்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

அரியலூர் கரைவெட்டி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

Published On 2022-02-14 09:20 GMT   |   Update On 2022-02-14 09:20 GMT
அரியலூர் கரைவெட்டி சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கரைவெட்டி கிராமத்தில் உள்ளது.

இந்த ஏரிக்கு புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் காவிரி நீர் பெறப்படுகிறது. இந்த ஏரியிலிருந்து விளை நிலங்களுக்கு பாசன வசதியும் உள்ளது. இந்த ஏரிக்கு அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிர கணக்கான மைல்கல் தூரங்களை கடந்து பல்வேறு வகையான பறவைகள் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன. சில பறவைகள் இங்கேயே கூடு கட்டி தங்கி விடுகின்றன.

இங்கு  ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் வந்து செல்வது கணக் கெடுக்கப் படும். இந்நிலையில் நடப்பாண்டுக் கான கணக் கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. கணக்கெடுப்பு பணியில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுற்றுசூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் அறிவியல் பேராசியர் சிவசுப்ரமணியன் தலைமையில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், பாதுகாவலர்களும் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் 48 வகையான நீர் வாழ் பறவைகளும், 68 வகையாக நிலத்தில் வாழக்கூடிய பறவைகள் உள்ளன என தெரியவந்துள்ளது‌.

இதில், பாம்பு தாரா, சாம்பல் கூழைகிடா, வெள்ளை அறிவால் மூக்கன், வண்ண நாரை உள்ளிட்ட பறவைகளும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நீள சிறகு வாத்து, தட்டை வாயன், நாமத்தலை வாத்து, கூலை கிடா, லடாக்கிலிருந்து வரும் வரிதலை வாத்து உள்ளிட்டவை அதிகளவு காணப் படுவதாக பேராசிரியர் சிவசுப்பிர மணியன் தெரிவித்தார். 

மேலும், நடப்பாண்டு அதிகளவு மழை பெய்ததால், மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளதால், பறவைகள் ஆங்காங்கே தங்கியிருப்பதை காணமுடிகிறது என்றார். கணக் கெடுப்பின் போது, மாவட்ட வன அலுவலர் கணேஷ், வன அலுவலர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News