திண்டிவனத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டது. இதை தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே மயிலம் முருகன் கோவில் பின்புறம் உள்ள தைலம் தோப்பில் சந்தேகத்திற்கிடமாக 2 மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த 2 நபர்களையும் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த நபர்கள் 2 பேரும் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி ( வயது 52) மற்றும் செல்வகுமார் (23) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் தந்தை, மகன் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் தொடர்ந்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த 2 நபர்களும் திண்டிவனம், மயிலும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
உடனே போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தந்தை, மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.