உள்ளூர் செய்திகள்
விருத்தாசலம் அருகே குடிபோதையில் புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன்
விருத்தாசலம் அருகே குடிபோதையில் புதுப்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுபடி லேடிஸ் பஸ்ட், ஹலோ சீனியர் ஆகிய காவல் உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் உடனடியாக காவல் நிலையங்களில் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் குமராட்சி மேல நெடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த சினேகா (வயது 20). இவர் மேற்கண்ட காவல் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு திருமணமாகி 6 மாதங்களில் கணவர் குடித்துவிட்டு அடித்து பிரச்சினை செய்வதாக புகார் தெரிவித்தார்.
அதன்படி குமராட்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மனைவிடம் பிரச்சினை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்த மூதாட்டி லட்சுமி என்பவர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு நபர் தன்னுடைய இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பழனிவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பந்தப்பட்ட மூதாட்டி லட்சுமிக்கு எந்தவித பிரச்சினையும் செய்யக்கூடாது என அந்த நபரை கடும் எச்சரிக்கை செய்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஏதேனும் பிரச்சனை நடந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என மூதாட்டியிடம் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இந்த காவல் உதவி எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுத்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.