தியாகதுருகத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.1.87 லட்சம்
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்கின்றனரா? என்பது குறித்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் பறக்கும் படை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி, போலீசார் பாஸ்கரன், ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பழம் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து சாமி (வயது 23) மற்றும் கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த மணிகண்டன் (32). டிரைவர். ஆகியோரிடம் எந்த ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 50 பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.