உள்ளூர் செய்திகள்
மலேசியாவுக்கு அனுப்புவதாக கூறி ரூ.6.40 லட்சம் மோசடி
வேதாரண்யம் அருகே மலேசியாவுக்கு அனுப்புவதாக கூறி ரூ.6.40 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமம் சின்னகுட்டி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 60). விவசாயி.
தமிழ்ச்செல்வன் சென்னை ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த ராமலிங்கம் (40) என்பவரிடம் நாலுவேதபதி பகுதியில் உள்ள ஒரு சில நபர்களை மலேசியாவுக்கு விசாவில் அனுப்பி வைப்பதாக கூறி ரூ.10 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கு மட்டுமே விசா எடுத்து கொடுத்துள்ளார். 2 நபர்கள் மலேசியா சென்ற நிலையில் மீதி உள்ளவர்களுக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் தொகை வழங்கப்படாமல் இருந்தது. பலமுறை கேட்டும் ராமலிங்கம் கொடுக்காமல் காலதாமதம் செய்ததால் தமிழ்ச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் குற்ற புலனாய்வு துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் நாகை குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து, ராமலிங்கத்தின் மனைவி சித்ரா மற்றும் டிராவல்ஸ் பணியாளர் வெங்கடேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.