உள்ளூர் செய்திகள்
ஜாதி சான்றிதழ் கோரி மகன்களுடன் போராடும் பெண்

ஜாதி சான்றிதழ் கோரி 3 மகன்களுடன் 7 ஆண்டுகளாக போராடும் பெண்

Published On 2022-02-08 16:25 IST   |   Update On 2022-02-08 16:25:00 IST
கள்ளக்குறிச்சியில் ஜாதி சான்றிதழ் கோரி 3 மகன்களுடன் 7 ஆண்டுகளாக போராடி வரும் பெண் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறினார்.
கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே கூ.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரமணிகண்டன் மனைவி முத்துமாரி (வயது 31). இவர் தனது கணவர் மற்றும் 3 மகன்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி மனு அளிக்க வந்தார். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க இயலாது. எனவே இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவை போடுமாறு கூறினர்.

பெட்டியில் போட மறுத்த முத்துமாரி நான் ஜாதி சான்றிதழ் கேட்டு கடந்த 7ஆண்டுகளாக போராடி வருகிறேன். எனவே மாவட்ட கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு அளிக்க வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ‌ஷபி என்பவரை சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் முத்துமாரி கூறியதாவது:-

நாங்கள் 33 ஆண்டுகளாக கூ.மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறோம், எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நாங்கள் மலைக்குறவன் சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஆண்டிக்குழி கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த இடம் எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். இதனால் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளேன்.

ஆனால் எனக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால் என்னுடைய மனு நிராகரித்து விடுவார்களோ என அச்சமாக உள்ளது. எனவே நான் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜாதி சான்று கோரி மனு அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்தில் உள்ள பொதுசேவை மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறும், அவ்வாறு விண்ணப்பித்தால் உங்களுக்கு ஜாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி முத்துமாரி தனக்கும், கணவர் மற்றும் 3 மகன்கள் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார்.

Similar News