நெல்லை அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.82 ஆயிரம் பறிமுதல்
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், தடுக்கவும் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 51 பறக்கும் படை குழுக்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு பறக்கும் படை அதிகாரி மணி வண்ணன் தலைமையில் போலீஸ்காரர்கள் பால சுப்பிரமணியன், பார்த்த சாரதி, சண்முககனி, கணபதி ஆகியோர் தலைமையிலான பறக்கும் படை நெல்லையை அடுத்த பிராஞ்சேரி பகுதியில் வாகன சோதனை மேற் கொண்டது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.82 ஆயிரம் பணம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
அதில் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது36) என்பதும், அவர் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கானங்குளத்திற்கு சென்றதும் தெரியவந்தது.
சதீஷ் சலூன் கடை வைத்துள்ளார். மேலும் சீட்டு பிரித்து நடத்துகிறார். அதற் கான தொகையை அவர் வசூல் செய்து கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனாலும் அதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கோபால சமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இன்று காலை பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.