உள்ளூர் செய்திகள்
செல்லப்பார் கோவில் கும்பாபிஷேகம்

பரசலூர் செல்லப்பார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-02-07 13:35 IST   |   Update On 2022-02-07 13:35:00 IST
மயிலாடுதுறை அருகே பரசலூர் செல்லப்பார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து பரசலூர் ஊராட்சி, மேலக்கட்டளை கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லப்பார் கோவில் உள்ளது. வடக்குநோக்கி அமைந்துள்ள இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. 

சாஸ்தாவின் ரூபங்களில் ஒருவரான குமார சாஸ்தாவாக வீற்றிருந்து செல்லப்பார் என்ற திருநாமத்துடன் உத்குடிகாசனம் எனும் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், பரசலூர் வீரேட்டேஸ்வரர் ஆகிய கோவில்களில் உள்ள சாமிகளுக்கு எல்லை காவல் தெய்வமாக செல்லப்பார் சாமி விளங்குகிறார்.
 
இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்த மறைந்த காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ சந்திரசேகர பரமாச்சாரிய சுவாமிகள் வழிபட்டு குமாரசாஸ்தா என்று அழைத்தார். செம்பனார்கோவல் பரசலூர் பகுதியை சேர்ந்த பல்வேறு குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த கோவலில் திருப்பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யானை ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்து வேத மந்திரங்கள் ஓத, கருடன் வட்டமிட, பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் எழுப்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து கருவறையில் உள்ள செல்லப்பார் திருவுருவத்துக்கு புனீத நீரை ஊற்றி மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், அர்ச்சகர்கள் ஷண்முகசுந்தரம், ஸ்ரீநாத், ஸ்ரீகாந்த், ஊராட்சி தலைவர் சண்முகம், வி.ஏ.ஓ. சிவசங்கர், ஊராட்சி செயலர் நாகராஜன், தெய்வ திருப்பணி குழுவினர், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News