உள்ளூர் செய்திகள்
உலர் கள வசதியில்லாததால் பாதிக்கும் விவசாயிகள்
போதிய உலர் கள வசதியில்லாததால் அறுவடை சீசனில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
உடுமலை:
உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில் கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு பகுதிகளில் 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் இருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்கின்றனர். அவ்வகையில் தற்போது கொழுமம் சுற்றுப்பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சில பகுதிகளில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இப்பகுதியில் போதிய உலர் கள வசதியில்லாததால் அறுவடை சீசனில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நெல் மணிகளை எந்திரங்கள் வாயிலாக பிரித்தெடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் வெயிலில் உலர வைத்தால் மட்டுமே ஈரப்பதம் குறைந்து விற்பனைக்கு தயாராகும்.
அப்பகுதி கிராமங்களில் போதிய உலர்களங்கள் இல்லாத நிலையில் சாலையிலும் விளைநிலங்களில் தார்ப்பாய் விரித்தும் நெல்லை காய வைக்கின்றனர். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
நெல் அறுவடை சீசனில் போதிய உலர்களங்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறு, குறு விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு நெல் கொண்டு செல்ல வாகன செலவு அதிகரிப்பதால் தயக்கம் காட்டுகின்றனர்.ஈரப்பதத்தை காரணம் காட்டி விலை நிர்ணயிப்பதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
எனவே நெல் அதிக அளவு சாகுபடியாகும் பகுதிகளில் உலர் களங்கள் கட்ட மாவட்ட வேளாண் விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.