உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்

Published On 2022-02-05 15:03 IST   |   Update On 2022-02-05 15:03:00 IST
நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:

கடந்த 31ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 21 பேரையும் அவர்களது இரு விசைப்படகுகளும் இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். 

இதற்கு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்களைப் பிடித்து செல்வதும் இலங்கை தமிழ் மீனவர்கள் இருவர் உயிரிழப்பிற்கு அவர்களே காரணம் என்றும் கூறி இலங்கையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவங்களால் இந்திய இலங்கை இருநாட்டு மீனவர்களுக்கு இடையே கடற்பரப்பில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. 

இதையடுத்து கடலில் சுமூகமாக இருநாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனிடையே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம், இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லுங்கள் என தமிழக அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து, நாகை மீனவர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதற்கிடையே எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்தால், விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட விசைப்படகு, 1 மாதம் கடலுக்குள் செல்ல அனுமதிப்பது இல்லை என்று நாகை மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

இந்த அறிவிப்பினை துறைமுகம் மற்றும் அப்பகுதி கடலோர மீனவ கிராமங்களில் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர். 

இதையடுத்து நாகை அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லாறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

Similar News