உள்ளூர் செய்திகள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நில உரிமையாளர்கள், விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

Published On 2022-02-04 16:14 IST   |   Update On 2022-02-04 16:14:00 IST
திருமருகல் அருகே சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

திருமருகல் அருகே சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்கம் சார்பில் ஒருநாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோல் கார்ப்பரேஷன் லிம்மிட்டெட் நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது.

சுமார் 618 ஏக்கர் பரப்பளவில், ரூ.38 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் சி.பி.சி.எல். பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டால் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் சி.பி.சி எல் ஆலை விரிவாக்கத்திற்காக தங்களது விளைநிலங்களை இழக்கும், விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு முன் முட்டம் கிராமத்திற்கு அரசால் வழங்கப்பட்ட நியாயமான இழப்பீட்டை வழங்கிட வேண்டும், சி.பி.சி.எல் நிறுவனத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் மற்றும் சாகுபடிதாரர்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் நிரந்தர பணிக்கு உத்திரவாதம் வழங்கிடவும், பாதிக்கப்படும் விவசாய சாகுபடிதாரர் மற்றும் அனைத்து விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் மாற்று வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும்.

சி.பி.சி.எல் நிறுவனம் சுற்றியுள்ள பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், குத்தாலம், முட்டம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களை பாதிக்காத வகையில் கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழல், குடிநீர் ஆதாரம் ஆகியவற்றுக்கான பாதுகாப்பை வெளிப்படைத் தன்மையோடு உறுதி செய்திட வேண்டும்.30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்து இதுவரை நடைமுறைபடுத்தாத வாக்குறுதியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விளை நிலங்களில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட் டத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் சுமூக தீர்வு ஏற்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.

Similar News