உள்ளூர் செய்திகள்
பாதயாத்திரை பக்தர் பலி

சரக்கு வேன் மோதி பாதயாத்திரை பக்தர் சாவு

Published On 2022-02-04 15:54 IST   |   Update On 2022-02-04 15:54:00 IST
அருப்புக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலியானார்.
பாலையம்பட்டி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரை  சேர்ந்தவர் பாண்டி(வயது 74). இவர் வருடந்தோறும்  திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.

அதன்படி பாண்டி அதே பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட குழுவுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். இன்றுகாலை அந்த குழுவினர் அருப்புக்கோட்டை அருகே உள்ள சேதுராஜபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாண்டி ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக  அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மினி வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதயாத்திரைக்கு புறப்பட்ட சில மணி நேரத்திலேயே முதியவர் வாகன விபத்தில் இறந்தது பாதயாத்திரை குழுவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News