உள்ளூர் செய்திகள்
நகைக்கடை தம்பதியிடம் 16 பவுன், 1 கிலோ வெள்ளி அபேஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் நகைக்கடை தம்பதியிடம் 16 பவுன், 1 கிலோ வெள்ளியை திருடிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன்லால் (வயது 44). இவர் வேப்பனப்பள்ளி-கிருஷ்ணகிரி சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு மோகன்லால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடையை பூட்டினர். பின்னர் தங்களது கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் தங்களது பையை போட்டனர். அந்த பையில் 130 கிராம் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி இருந்தது.
அப்போது கணவன்-மனைவி இருவரும் சிறிதுநேரம் பேசி கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென நகைபையை நைசாக அபேஸ் செய்து தப்பி சென்று விட்டனர்.
சிறிதுநேரம் கழித்து வந்த மோகன்லாலும், அவரது மனைவியும், மோட்டார் சைக்கிளில் மாட்டியிருந்த நகை பை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் வந்து நகையை திருடிச்சென்ற வாலிபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
நகைக்கடை தம்பதியிடம் நகை,வெள்ளியை மர்ம வாலிபர்கள் அபேஸ் செய்த சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.