உள்ளூர் செய்திகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்ஜாமீனை ரத்து செய்யகோரி வாளையார் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் மனு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து தனது நிபந்தனை ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வாளையார் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
தற்போது இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ், திபு, சதீசன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜூக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் ஊட்டியில் தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி அவரும் ஊட்டியில் தங்கியிருந்து கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் தனது நிபந்தனை ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி வாளையார் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஊட்டியில் தங்கி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் எனக்கு எந்த பணியும், வருமானமும் இல்லாததால் தங்குவதற்கு இடமும், உணவும் கிடைக்கவில்லை.
எனவே எனது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வருகிறது.