உள்ளூர் செய்திகள்
நீரோடையில் வீடு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கொடுவாய் நாகலிங்கபுரத்தில் நீரோடை உள்ளது. இந்தநிலையில் ஓடைக்கு நீர் செல்லும் நீர்வழி பாதையின் கரையில் கொடுவாயைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அரசு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இதற்கு துவக்கத்திலிருந்தே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கட்டிடம் கட்டுவதற்காக தொழிலாளர்கள் வந்திருந்தனர். பொதுமக்கள் இங்கு நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினால் தண்ணீர் ஊருக்குள் வந்து விடும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தாசில்தாரிடம் பேசிக் கொள்ளுங்கள்' என்று அவர்கள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.