உள்ளூர் செய்திகள்
கட்டிட பொருட்கள் திருடிய வாலிபர் கைது
ஈரோட்டில் வேலை செய்யும் இடத்தில் கட்டிட பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் வேலை செய்யும் இடத்தில் கட்டிட பொருட்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் அய்யன்காளி தெருவை சேர்ந்தவர் காளிதாசன் (வயது 38). இவர் சொந்தமாக ஈரோடு 16 ரோடு, சின்னமாரியம்மன் கோவில் பின்புறம் கட்டிட வேலை எடுத்து நடத்தி வருகிறார்.
அதேஇடத்தில் குடோனும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீரப்பன்சத்திரம் முல்லை தெருவை சேர்ந்த அழகேசன் (20) என்பவர் காளிதாசன் குடோனில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அழகேசன் குடோனில் இருந்து ஒரு பையுடன் வேகமாக வெளியே சென்றார். அப்போது அங்கு காளி தாசன் வந்தார். அவரை பார்த்ததும் அழகேசன் தப்பி ஓட முயன்றார். காளிதாசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அழகேசனை மடக்கி பிடித்தார்.
அப்போது அந்த பையில் டிரில்லிங் மிஷின், கட்டிங் மெஷின் இருந்தது. இதுகுறித்து அழகேசனிடம் கேட்டபோது எனக்கு சம்பளம் போதவில்லை என்பதால் இங்குள்ள பொருட்களை திருடி அதை விற்று செலவு செய்யலாம் என எண்ணி கள்ளசாவி போட்டு பொருட்களை திருடினேன் என்று கூறினார்.
இதையடுத்து அழகேசனை வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர்.