உள்ளூர் செய்திகள்
குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

கள்ளக்குறிச்சியில் குடியரசு தின விழா- 42 பயனாளிகளுக்கு ரூ.27.80 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-01-26 16:45 IST   |   Update On 2022-01-26 16:45:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 32 துறைகளைச் சேர்ந்த 181 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:

நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு, தமிழ்நாடுகூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் சமாதான புறாக்களையும், மூவர்ன கலர் பலூன்களையும் பறக்கவிட்டார், தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 32 துறைகளைச் சேர்ந்த 181 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வருவாய்த்துறை, உள்ளிட்ட 8 துறைகளைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு ரூ. 27 லட்சத்து 80 ஆயிரத்து 613 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பூங்கொடி, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் குமரன், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியகுழு சேர்மன் அலமேலு ஆறுமுகம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயணாளிகள் பலரும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News