உள்ளூர் செய்திகள்
மகள் மரணத்தில் மர்மம் தந்தை போலீசில் புகார்
தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
கரூர் பிரதட்ணம் ரோடு பகுதியை சேர்ந்தவர் வீர மணி (வயது 62). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்றாவது மகள் சங்கீதா. இவர் கோவையில் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, திருச்சி மாவட்டம் முசிறி இந் திரா நகரை சேர்ந்த ரமேஷ் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ரமேஷ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். மேலும் முசிறி நீதிமன்றத்தில் இருவரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் ரமேஷ்&சங்கீதா தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் ரமேஷ் வீட்டில் சங்கீதாவை அடிக்கடி துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கடந்த 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு சங்கீதாவின் கணவர். சங்கீதாவின் அக்காவிற்கு போன் செய்து சங்கீதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சங்கீதா, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். தன் மகளின் உடலை பார்த்த பொழுது காயங்கள் இருந்ததாகவும், மகளை பரிசோதித்த டாக்டர் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும் சங்கீதாவின் தந்தை தெரிவித்தார்.
எனவே தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக முசிறி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.