உள்ளூர் செய்திகள்
போலீசாரால் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

பச்சிளம் குழந்தையை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? போலீஸ் விசாரணை

Published On 2022-01-24 05:33 GMT   |   Update On 2022-01-24 05:33 GMT
பிறந்த சில மணி நேரங்களில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தில் ஓடைப்பாலம் அருகே நேற்று இரவு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.
 
இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் அந்த சிசுவை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? தவறான உறவில் பிறந்ததால் வீசி சென்று உள்ளனரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசி சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் அரசு   மருத்துவமனையில் நேற்று  பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்  எத்தனை, அந்த குழந்தைகள் தாயின் பராமரிப்பில் உள்ளதா? யாராவது  டிஸ்சார்ஜ்  ஆகி சென்றுள்ளார்களா என்று செவிலியர்களின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் 3 கி.மீ. தொலைவில் உள்ள கட லூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தையை இங்கு வந்து யாராவது வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News