உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் சாலைகள், தெருக்கள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இன்று முழு ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாத நிலையில் ரெயில்கள் மட்டும் ஓடின. ஆனால் அதில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு நாளான இன்று கடைகளை திறந்து மீன் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு நகராட்சி ஆய்வாளர் மல்லிகா உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர் சந்திரா அபராதம் விதித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பகல் நேர ரெயில்கள் இல்லாததால் ரெயில் நிலையங்களும் களை இழந்து காணப்பட்டன.
ராமேசுவரம் கோவில் அடைக்கப்பட்டு இருந்ததால் வெளிமாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் கோவில் வீதிகள் வெறிச்சோடி இருந்தது-.
ஊரடங்கை கருத்தில் கொண்டு நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் இன்று மீன்பிடி துறைமுகத்தில் யாரும் இல்லாத நிலை காணப் பட்டது. விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் நிலையம் எந்தவித வாகன போக்குவரத்துமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிளும் மக்கள் வீடுகளில் முடங்கினர். சாளைகள் மற்றும் தெருக்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.