உள்ளூர் செய்திகள்
காவலாளி சாவு

மதுரை அரிசி ஆலையில் காவலாளி கருகி சாவு

Published On 2022-01-22 16:56 IST   |   Update On 2022-01-22 16:56:00 IST
மதுரை அரிசி ஆலையில் மின்சாரம் தாக்கியதில் காவலாளி உடல் கருகி பலியானார்.
மதுரை

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 58). இவர் ராஜமான் நகரில் உள்ள அரிசி ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முத்துக்கருப்பன் இரவு பணியில் இருந்தார். அரிசி ஆலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே முத்துக்கருப்பன் மேலே ஏறிச்சென்று மின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த முத்துக்கருப்பன் நெல் குவியலுக்குள் தூக்கி வீசப்பட்டார்.

அதேசமயம் அரிசி ஆலையில் தவிடு உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய தொடங்கின. முத்துகருப்பன் நெல் குவியலில் விழுந்ததை கவனிக்காத ஊழியர்கள் தீ விபத்து தொடர்பாக அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு அதிகாரி உதயகுமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணி மும்மரமாக நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான், அணைக்கப்பட்டது.

அதன்பின் அரிசி ஆலை ஊழியர்கள் தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவிந்த நெல் மற்றும் எந்திர இடிபாடுகளுக்கு இடையே முத்துக்கருப்பன் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.  

இதுகுறித்து தகவலறிந்த  கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முத்துக்கருப்பன் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். அவருக்கு முத்துபாண்டியராஜன் என்ற மகன் உள்ளார். அவர் சிந்தாமணி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News